ஆவணங்கள் / ஆதாரங்கள் அடிப்படையிலான காயல் வரலாற்று பயணம்!
தமிழ் நாட்டின், தென்கோடியில், தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டினம் / காயல்பட்டணம் - பல நூறு ஆண்டுகள் வரலாற்றினை கொண்ட நகரமாகும்.
இவ்வூரின் வரலாற்றினை, குறிப்பாக இஸ்லாமியர் குடியமர்வு முதலான வரலாற்றினை ஆவணப்படுத்த, பல்வேறு முயற்சிகள் கடந்த காலங்களில் எடுக்கப்பட்டுள்ளது. 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டிலும் சில புத்தகங்களும் - உள்ளூர் வரலாற்று ஆர்வலர்களால், வெளியிடப்பட்டுள்ளன.
பல சுவாரசியமான செய்திகளை அந்த வரலாற்று நூற்கள் தெரிவித்தாலும், காயல்பட்டினம் / காயல்பட்டணம் வரலாறு - ஒரு முழுமையான செய்தியாக, தகவலாக, ஏற்றுக்கொள்ள கூடிய ஆதாரங்களுடன் - இன்னும் சமுதாயம் முன்பாக கொண்டு வரப்படவில்லை என்பதே உண்மை.
காயல்பட்டினம் (இஸ்லாமிய குடியிருப்பு) வரலாறு எடுத்துரைக்கும் பலர் - மிகவும் எளிதாக, இஸ்லாம் தோன்றிய காலத்தில் இருந்தே - காயலில் இஸ்லாம் உள்ளது போன்ற கூற்றுகளை வைக்கிறார்கள். இது உண்மையாக இருக்கலாம்.
ஆனால் இதனை நிறுவ ஆவணங்கள் அடிப்படையிலான ஆதாரங்கள் இல்லை என்ற தற்போதைய நிலையில், இது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகவும் இருக்கலாம் என ஏற்றுக்கொண்டு, காயலின் தொன்மையை, வரலாற்று சான்றுகளுடன், இன்னும் தீவிரமாக தேடும் எண்ணமோ, சிந்தனையோ - இத்துறையில் ஆர்வம் காண்பிக்கும் பலரிடம் இல்லை என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
அவர்களின் அணுகுமுறை - ஒரு முடிவை, ஒரு வரலாற்று கூற்றை பகிரங்கப்படுத்தி, அதன் பின்னணியில், பல இடங்களில், எந்த மூல ஆதாரங்களும் தற்போது இல்லை என அறிந்தும் (?), அதனை மெய்ப்பிக்க எடுக்கப்படும் முயற்சிகளாகவே உள்ளன.
இந்த குறைப்பாடுகளை களைந்து, தற்போதைய காலகட்டத்தில் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்தி, காயல் வரலாறு குறித்த ஆவணங்களை திரட்டும் நோக்கில் - kayalpatnam.com இணையதளத்தை நடத்திவந்த THE KAYAL FIRST TRUST உடைய - மற்றொரு முயற்சியாக, 2010 ஆம் ஆண்டு ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. (Kayal History Project; kayalhistory.com)
அதன் பயனாக - பல அரிய தகவல்களும், புத்தகங்களும் சேகரிக்கப்பட்டாலும் - அவைகளை, கோர்வையான முறையில், வெளி உலகிற்கு கொண்டு வரும் பணி, பல்வேறு காரணங்களுக்காக, நடக்கவில்லை.
அந்த முயற்சி, அதிகாரப்பூர்வமாக துவக்கப்பட்டு ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து, இந்த புதிய இணையதளம் (history.kayal.org) வாயிலாக, காயல்பட்டினம் வரலாறு குறித்த பல்வேறு தகவல்களை - அவற்றின் மூல ஆதாரங்களுடன், இறைவன் நாடினால், வெளியிட நாடியுள்ளோம்.
வெறும் தகவல் வழங்கும் பக்கங்களாக இவை இல்லாமல், சிந்தனையை தூண்டும் பல்வேறு அம்சங்களையும் அடங்கிய பக்கங்களாக - இறைவன் நாடினால் - இவை இருக்கும் என நம்புகிறோம்.
இணைந்திருங்கள்.
Comments